Tuesday, 17 December 2013

ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்

ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 

இதனையே ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். 

ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். 

சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. 

எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

சிதம்பரம், உத்தரகோஷமங்கை போன்ற ஆலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது. 

ஆருத்ரா தரிசனம் காண வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்து இறைவனை தரிசித்து செல்கின்றனர். 

திருவாதிரைக் களி 'திருவாதிரைக்கு ஒருவாய்க்களி' என்பது பழமொழி. 

எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். 

இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது. 

திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன புராணங்கள். 

உலகை இயக்கும் நடனம் இந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. 

உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். 

இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. 

இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். 

எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். 

நடராஜரின் ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும். 

சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். 

இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. 

சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். 

இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜனின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம். 

பதஞ்சலி முனிவருக்கு அருள் பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். 

திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். 

பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். 

பெருமாளும் ஆசியளித்தார். 

உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். 

தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். 

சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார். 

நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். 

அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். 

எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள். 

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனம், ஞாயிறுக்கிழமை நடைபெறுகிறது. 

சனிக்கிழமை தேர் திருவிழாவும் இதனைத் தொடர்ந்து ஞாயிறு அதிகாலை, நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஆயிரங்கால் மண்டப முகப்பில், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

இதன்பின்னர் பகல், 12 மணிக்கு மேல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator