Friday 24 October 2014

கந்த சஷ்டியின் மகிமை!


கந்த சஷ்டியின் மகிமை!

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்த சஷ்டிப் பெருவிழாவாகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும் பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியவர்களோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது கந்தசஷ்டிப் பெருவிழா. செவ்வேள் பரமனாகிய கந்தனுக்கும் சூரபதுமனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர்.

போருக்குப் பின்னர் முருகன் இந்திரன் மகளாகிய தெய்வ யானையை மணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். அது ஏழாம் நாள் விழா.

செந்தமிழ் நாட்டில் நடைபெற்ற வரலாற்றை மையமாகக் கொண்ட செந்தமிழ்க் கடவுளின் தெய்வப் பெருவிழாவே கந்த சஷ்டிப் பெருவிழா. ஆன்மாக்களுக்கு அல்லது மானிட உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம்.

அதை ஒட்டி ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் உண்டு. அவைகள் மாயை, கன்மம் எனப்பெறும். மாயையானது உலகப் பொருள்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டுபண்ணும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும். மயக்கத்தை உண்டாக்குதலும் ஆன்மாக்களை உலகப் பொருள்களின் மேல் பற்று முதலியவைகளை ஏற்படுத்துதலும் ஆகிய இரண்டு வகைகளில் செயற்படுவது மாயை. சூரபதுமனின் ஒரு தம்பியாக நின்ற தாருகனே மாயை மயமாக நின்று செயல்படுபவன்.

அடுத்த அழுக்கானது கன்மம். இதுவும் இரண்டு வகைப்படும். நல்வினை, தீவினை என சிங்க முகன் கன்ம மயமாக நின்றவன்.

மூன்றாவது மூல அழுக்கே ஆணவம். இதுவும் நான் என்றும் எனது என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாள்களில் அவைகளை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்த சஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்.

இந்த மூன்று அழுக்குகளிலிருந்து நீங்கிய மன்தனின் ஆன்மா இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும் உலகப் பொருள்களும் இறைவன் படைப்புகள் என்று உணர்ந்தால் மாயையிலிருந்து விடுபடலாம். தீவினைகள் எப்போதும் செய்யக்கூடாது. நல்வினைகளைச் செய்யும்போது அவைகள் நம் முயற்சியென்று கருதாமல், அவைகளை இறைவன் நம் மூலமாகச் செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினைப் பயன் நம்மைச் சாராது. மறுபிறப்பும் ஏற்படாது. அற வாழ்க்கையை மேற்கொண்டு, எப்போதும் இறைவனைச் சிந்தித்து எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன என்று கருதினால் ஆணவத்திலிருந்து விடுபடலாம்.

இத்தத்துவத்தை நம் கையிலுள்ள ஐந்து விரல்கள் மூலம் அறியலாம். பெருவிரல் இறைவனையும் அதற்கடுத்த ஆள்காட்டி விரல் ஆன்மாவையும் மற்ற மூன்று விரல்கள் முறையே ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளைக் குறிக்கும். ஆள்காட்டி விரல் மற்ற மூன்று விரல்களோடு இணைந்திருப்பது ஆன்மா ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளுடன் இணைந்திருப்பதைக் குறிக்கும். ஆள்காட்டி விரல் மற்ற மூன்று விரல்கள் இணைப்பிலிருந்து விலகி சற்று வளைந்தவுடன் பெருவிரலை அடைய முடியும். அதாவது ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளிலிருந்து விடுபட்டால் இறைவனடி சேரும்.

தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் "சின்முத்திரை' இந்தத் தத்துவத்தைக் குறிக்கும். இறைவனுக்குத் தேங்காய் படைப்பதும் இத்தத்துவத்தைக் குறிக்கும். பச்சைமேல்மட்டை மாயையும் நார் கன்மத்தையும் ஓடு ஆணவத்தையும் குறிக்கும். இம்மூன்றும் நீக்கப்பட்டவுடன் தேங்காயின் வெள்ளைப் பருப்பு சுத்த ஆன்மாவைக் குறிக்கும்.

கந்தப் பெருமான் சூரபத்மனை வென்று அவனைத் தன் மயில் வாகனமாகவும் சேவற் கொடியாகவும் மாற்றினான். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். கந்த சஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்தால் கந்தப்பெருமான் திருவடியடைந்து நிலைத்த இன்பம் பெறுவோம்.

- சித்தாந்த இரத்தினம் செ. வெ. சதாநந்தன்.




 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator