Tuesday 5 August 2014

30 வகை ஆவியில் வேகவைத்த உணவு



30 வகை ஆவியில் வேகவைத்த உணவு

''சாப்பிடும்போது நல்லாதான் இருந்தது... ஆனா, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் வயித்த என்னவோ பண்ணுது'' - இப்படி அலுத்துக் கொள்ளாதவர்கள் மிகவும் குறைவு. உணவு வகைகளிலேயே, வயிற்றுக்கு இதமானவை என்ற வரிசையில் ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு முதல் இடம் உண்டு. புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை, இலை வடாம், இட்லி, வெஜ் ரோல், டோக்ளா, காண்வி என ஆவியில் வேகவைத்த உணவுகளில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் அலசி ஆராய்ந்து, அவற்றில் 30 வகைகளைக் கண்ணைக் கவரும் அழகுடன், சுண்டியிழுக்கும் சுவையுடன் இந்த இணைப்பிதழில் உங்களுக்காக குவித்திருக் கிறார் சமையல்கலை நிபுணர் லஷ்மி ஸ்ரீநிவாசன்.

''ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றை முடிந்த அளவுக்கு தவிர்த்துவிட்டு, இந்த ரெசிபிகளை செய்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினரின் வாயும், வயிறும் உங்களை வானுயர வாழ்த்தும்'' என்று பாசமிகு தோழியாய் பரிவும், உற்சாகமும் பொங்கக் கூறுகிறார் லஷ்மி.

முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா

தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.

தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.

அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.

தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

ஸ்டஃப்டு கோஸ் ரோல்

தேவையானவை: இளம் கோஸ் இலைகள் - 10, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, லவங்கம் - 10.

பூரணம் செய்ய: அரை மணி நேரம் ஊறவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, சீரகம் தலா - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்).

செய்முறை: கோஸ் இலைகளை வெந்நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து சமன்படுத்தவும். பூரணம் செய்ய கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து எடுக்கவும் (நீர் விட வேண்டாம்). தாளிக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர பிற பொருட்களைத் தாளித்து, பின்னர் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூரண கலவையுடன் நன்கு கலக்கவும்.

எலுமிச்சை அளவு பூரணம் எடுத்து கோஸ் இலையில் மெல்லியதாக வட்டமாக பூசி, பாய் போல் சுருட்டி ஒரு லவங்கம் செருகி ஆவியில் 7 நிமிடம் வேகவிட்டு எடுத்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

நோன்பு கார அடை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், வேகவைத்த காராமணி (பயறு வகை) - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த காராமணி, பச்சரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து கனமாக தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

நோன்பு சமயத்தில் இதை விசேஷ உணவாக செய்வார்கள்.

அவித்த அவல் புட்டு

தேவையானவை: நெய்யில் வறுத்துப் பொடித்த சிவப்பு அவல் - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லத்தூள் - அரை கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பொடித்த அவலுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரை கப் சுடு நீர் தெளித்து நன்கு பிசிறவும். இதை ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு, நன்கு ஆறியபின் உதிர்த்து, நெய், நாட்டுச்சர்க்கரை (அ) வெல்லத்தூள் சேர்த்துப் பிசிறி, முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் டூட்டி ஃப்ரூட்டி 2 டீஸ்பூன் கலந்து தரலாம். வெள்ளை அவலிலும் இந்தப் புட்டு செய்யலாம்.

நோன்பு இனிப்பு அடை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், ஊறவைத்து, வேகவைத்த காராமணி (பயறு வகை)- 2 டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பாகு வெல்லம் - முக்கால் கப், நெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி மாவை 2-3 நிமிடம் வறுத்து, ஆறவிடவும். முக்கால் கப் பாகு வெல்லத்துடன் ஒன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் வறுத்த பச்சரிசி மாவு, ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய்ப் பல், வேகவைத்த காராமணி சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசையவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, ஹார்லிக்ஸ் பாட்டில் மூடி அளவுக்கு தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிடலாம். இது காரடையான் நோன்பு ஸ்பெஷல் ஆகும்.

வாழைத்தண்டு இட்லி

தேவையானவை: வீட்டில் அரைத்த இட்லி மாவு - 2 கப், நார் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு - அரை கப், உப்பு - அரை டீஸ்பூன்.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புரட்டி ஆறவிடவும் (சூட்டுடன் போட்டால் மாவு கட்டி தட்டும்). இதை இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, வழக்கமான இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு எந்தவித சட்னியும் தொட்டு சாப்பிடலாம்.

வெள்ளை எள் இலை அடை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - அரை டீஸ்பூன், வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: வெள்ளை எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: இரண்டு கப் நீரைக் கொதிக்கவிட்டு, அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து இறக்கி, அரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறி, மூடி ஆறவிடவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வெந்த அரிசி மாவிலிருந்து சிறிய சாத்துக்குடி அளவு எடுத்து, நறுக்கிய வாழை இலையில் வைத்து கையால் வட்டமாக தட்டி, பொடித்து வைத்த பூரணத்தை பரவலாக தூவி அப்படியே வாழை இலையுடன் மடித்து, ஆவியில் 7 - 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் வாழை இலையிலிருந்து எடுத்து, வறுத்த எள் தூவி பரிமாறவும்.

டிரை ஃப்ரூட் சேவை

தேவையானவை: பச்சரிசி மாவு - 2 கப், பொடித்த சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சமையல் எண்ணெய் - ஒரு சொட்டு, உப்பு - ஒரு சிட்டிகை.

வறுத்து சேர்க்க: நெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி, நறுக்கிய பாதாம், உலர்திராட்சை, வெள்ளரி விதை - தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நான்கு கப் நீரை கொதிக்கவிட்டு, உப்பு, எண்ணெய் சேர்க்கவும். இதில் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அ¬ணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய்யை சூடாக்கி டிரை ஃப்ரூட் வகைகளை வறுத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து, மேலும் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பரிமாறும் முன் மில்க்மெய்ட் சிறிதளவு விட்டு பரிமாறவும்.

பச்சரிசி இலை வடாம்

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, சிறிய பச்சை மிளகாய் - 8, ஓமம் - அரை டீஸ்பூன், உப்பு, பெருங்காயத் தூள் - தேவையான அளவு, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை 2 மணி ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைத்து, 2 நாட்கள் ஊறவிடவும். மூன்றாம் நாள் காலை மாவுடன் ஓமம் சேர்க்கவும். நறுக்கிய வாழை இலையில் மாவை மிகவும் மெல்லிய தோசை போல் ஊற்றி பரப்பி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் இலையிலிருந்து வடாமை நீக்கி, அப்படியே சாப்பிடலாம். இதை வெயிலில் காயவிட்டு வைத்துக்கொண்டு, வேண்டும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.

குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.

சாக்லேட் இடியாப்பம்

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், நீர் - 2 கப், நெய் - ஒரு டீஸ்பூன், மில்க் சாக்லேட் (துருவியது) 10 அல்லது சாக்லேட் சாஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும்) - 3 டேபிள்ஸ்பூன், துருவிய முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: நீரைக் கொதிக்கவிட்டு, உப்பு, நெய் சேர்க்கவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். இதனுடன் துருவிய சாக்லேட் (அ) சாக்லேட் சாஸ் சேர்த்து, துருவிய முந்திரி தூவி பரிமாறவும்.

ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏற்ற டிபன் இது.

ரைஸ் பீஸ் பால்ஸ்

தேவையானவை: ஒரு மணி நேரம் ஊறவிட்டு நைஸாக, கெட்டியாக அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், புதினா - கொத்தமல்லி விழுது - 2 டேபிள்ஸ்பூன், நசுக்கிய பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: அரைத்த பச்சரிசி மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், புதினா - கொத்தமல்லி விழுது சேர்த்து, பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்தால்... சூப்பர் சுவையில், ரைஸ் பீஸ் பால்ஸ் தயார்.

மாதுளம் இலை அடை

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், தூள் வெல்லம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு,

செய்முறை: 2 கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு மாவு, சேர்த்துக் கிளறி ஆறவிடவும். மாதுளை முத்துக்கள், வெல்லம், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். வாழை இலையில் சிறிய சாத்துக்குடி கிளறிய மாவை சிறிய அப்பளம் போல் பரத்தி, கொஞ்சம் மாதுளை கலவையை நிரப்பி அப்படியே ஒட்டி மடித்து ஆவியில் வேகவிட்டு, வெந்த பின் இலை நீக்கி பரிமாறவும்.

அவல் - பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை

தேவையானவை: ரவையாக பொடித்த கெட்டி அவல் - ஒரு கப், வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப், உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, வேகவைத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை: ரவையாக பொடித்த அவலை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை கப் வெந்நீர் தெளித்து நன்கு பிசிறி வைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வெந்த பாசிப்பருப்பு, பிசிறிய அவல் சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறிய பின் உருண்டை / நீளவாக்கில் உருட்டி 5 - 7 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

அவல் எளிதில் ஜீரணம் ஆகும். இந்த பிடிகொழுகட்டை விரத நாட்களுக்கு ஏற்றது.

ஆப்பிள் ஸ்டஃப்டு கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: துருவிய ஆப்பிள் - ஒரு கப், இனிப்பு பால் கோவா - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி ஊறவிட்டு, உப்பு, 2 கப் நீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய், அரைத்த மாவு சேர்த்து அடிபிடிக்காது, கட்டியின்றி கைவிடாமல் கிளறி இறக்கவும். பூரணத்துக்கான பொருட்ளை கலந்துகொள்ளவும். மேல் மாவில் கொழுக்கட்டைக்கான சொப்புகள் செய்து, பூரணத்தை நிரப்பி மூடி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

தேன்குழல் கீர்

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசி மாவு, உப்பு, நெய் ஆகியற்றை வெந்நீர் விட்டு முறுக்கு மாவு போல் பிசைந்து, இட்லித் தட்டில் சிறிய சிறிய தேன்குழல்களாக பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கொஞ்சம் சூடாக்கவும். வேகவைத்த தேன்குழல்களை சூட்டுடன் இதில் போட்டு, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை சேர்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.

மிக்ஸ்டு பருப்பு மினி இட்லி

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம், அரிசி - 25 கிராம், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 25 கிராம், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊறவிட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைக்கவும். தாளிக்கக் கொடுத் துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த் துக் கலக்கவும். உடனடியாக சிறிய மினி இட்லி தட்டில் நெய் / எண் ணெய் தடவி மாவை விட்டு, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மாவை புளிக்கவைக் கக் கூடாது. இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.

ஹனி ரைஸ் காண்வி

தேவையானவை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு நைஸாக அரைத்த மாவு - ஒரு கப், தேன் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள், துருவிய சீஸ் - சிறிதளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும். வாழை இலையில் மெல்லிய சிறிய தோசை போல் மாவை ஊற்றி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும் பிறகு, ரிப்பன் போல் நீளவாக்கில் 'கட்' செய்து (ஒரு இன்ச் அகலத்துக்கு) பாய் போல் சுருட்டவும். இதுதான் ரைஸ் காண்வி. எல்லாவற்றையும் இதுபோல் செய்துகொள்ளவும். ரைஸ் காண்விகளை தட்டில் வைத்து மேலே தேன், துருவிய சீஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.

ஃப்ரூட் ரைஸ் காண்வி

தேவையானவை: ஹனி ரைஸ் காண்வி செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ள படி தயாரித்த ரைஸ் காண்வி - 2 கப், மிகவும் பொடிதாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், பலாப்பழம், கொய்யா, ஆப்பிள், பைனாப்பிள்) எல்லாம் சேர்ந்து - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய் எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை: ரைஸ் காண்விகளை ஒரு கிண்ணத்தில் வைத்து, மேலே நறுக்கிய பழங்கள் சர்க்கரை, எசன்ஸ் சேர்த்து உடனே பரிமாறவும்.

மிக்ஸ்டு வெஜ் ரைஸ் காண்வி

தேவையானவை: 117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் (சேர்த்து) - அரை கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: காய்கறிகளுடன் உப்பு சேர்த்து, எண்ணெயில் வதக்கவும். ரைஸ் காண்விகளை தட்டில் பரத்தவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து, வதக்கிய காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தயிர் காண்வி

தேவையானவை: 117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி - 2 கப், கெட்டித் தயிர் - அரை கப், துருவிய கேரட் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெள்ளரிக்காய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, சர்க்கரை - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மோர் மிளகாய் - 2, சமையல் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: செய்முறை: ரைஸ் காண்விகளின் மேல் தயிரை ஊற்றவும். உப்பு, சர்க்கரையைத் தூவவும். எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்து... கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, ரைஸ் காண்விகளுடன் சேர்க்கவும். துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரி, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

மாங்காய் ரைஸ் காண்வி

தேவையானவை: 117-ம் பக்கத் தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயா ரித்த ரைஸ் காண்வி - ஒரு கப், துருவிய மாங்காய் (அதிக புளிப்பு இல்லாதது) - கால் கப், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, வெள்ளை எள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சமையல் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை: தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... துருவிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, ரைஸ் காண்விகள் மீது கொட்டவும். பரிமாறும் முன் நன்கு கிளறி பரிமாறவும்.

டேட்ஸ் - கசகசா கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - அரை கப், வறுத்த கசகசா - 2 டேபிள்ஸ்பூன், கொப்பரைத் துருவல் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: பூரணத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்ளை நன்கு கலந்துகொள்ளவும். இரண்டு கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். ஆறிய பின் மாவில் கொழுக்கட்டைக்கான சொப்புகள் செய்து, அதில் பூரணத்தை நிரப்பி மூடி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

கேரட் அம்மணி கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

செய்முறை: இரண்டு கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். இந்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிலிண்டர் வடிவத்தில் மிகச் சிறியதாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து, கேரட் துருவல், மஞ்சள்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து பரிமாறவும்.

தக்காளி இலை வடாம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பழுத்த தக்காளி - 3, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: பச்சரியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு உப்பு, தக்காளி சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் மிள காய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். வாழை இலையில் மாவை மெல்லிய சிறிய தோசை போல் ஊற்றி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் உரித்து, அப்படியே சாப்பிடலாம். இதை வெயிலில் காயவிட்டு எடுத்து... தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.

குறிப்பு: இலை வடாம் செய் வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன் படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.

பனீர் பால் கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - அரை கப், நீர் - ஒரு கப், உப்பு - கால் சிட்டிகை, எண்ணெய் 2 சொட்டு, சுண்டக் காய்ச்சிய பால் - ஒரு கப், சிறியதாக நறுக்கிய பனீர் துண்டுகள் - 10, ஏலக்காய்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 50 கிராம்.

செய்முறை: நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். ஆறிய பின் மாவை சீடை போல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரையுடன் கால் கப் நீர் ஊற்றி சூடாக்கி, கொதி வந்தவுடன் பனீர் துண்டுகள். வேகவைத்து எடுத்த சீடைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் சுண்டக்காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் உபயோகித்தும் இதை செய்யலாம்.

சென்னா - கோதுமை ரவை கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், வேகவைத்த சென்னா - கால் கப், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 8.

செய்முறை: தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, கொதி வந்தவுடன் உப்பு, கோதுமை ரவை, வேகவைத்த சென்னா சேர்த்து, பாதி வெந்தவுடன் இறக்கவும். ஆறியபின் மாவை உருண்டை / நீளவாக்கில் உருட்டி இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். தக்காளி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

கேரள பழப்புட்டு

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள்- சிறிதளவு, வாழைப்பழம் - 10 (வில்லைகளாக நறுக்கவும்), நெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசி மாவை சிவக்க வறுத்து, சிறிது உப்பு கலந்த வெந்நீர் தெளித்து பிசிறவும் (பிசையக் கூடாது). புட்டுக் குழலில் சிறிதளவு மாவு, சிறிதளவு தேங்காய் துருவல் என்று மாற்றி மாற்றி நிரப்பி, 10 மிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள், நறுக்கிய வாழைப்பழம் கலந்து பரிமாறவும்.

கொத்தமல்லி இடியாப்பம்

தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்.

அரைக்க: கொத்தமல்லி, புதினா - தலா அரை கட்டு, சிறிய பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். தாளிக்கும் பொருட்க¬ளைத் தாளித்து இதனுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கார ராகி ரோல்ஸ்

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சிறிய பச்சை மிள காய் - 4 (விழுதாக்கவும்), பெருங் காயத்தூள், உப்பு - சிறிதளவு.

பூரணம்: துருவிய சீஸ் - 200 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ் பூன், உப்பு - சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி - கைப்பிடி அளவு.

செய்முறை: பூரணத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கலந்துகொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிதளவு நீர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். ஒரு சிறிய கரண்டி மாவை எடுத்து வாழை இலையில் மெல்லிய சிறிய தோசைகளாக ஊற்றி, ஆவியில் 3 நிடம் வேகவிட்டு எடுக்கவும். வெந்த கேழ்வரகு தோசைகளின் உள்ளே பூரணத்தை நிரப்பி, அப்படியே பாய் போல் சுருட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

ஸ்வீட் ராகி ரோல்ஸ்

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - கால் கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - வறுத்த முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை சிறிதளவு நீர், உப்பு சேர்த்து தோசை மாவு போல் 3 நிமிடம் கரைத்துக்கொள்ளவும். ஒரு சிறிய கரண்டி மாவு எடுத்து வாழை இலையில் மெல்லிய சிறிய தோசைகளாக ஊற்றி, ஆவியில் 3 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இந்த பூரணத்தை ஆவியில் வெந்த கேழ்வரகு தோசைகளின் உள்ளே நிரப்பி, அப்படியே பாய் போல் சுருட்டி பரிமாறவும்.

தொகுப்பு: பத்மினி 
படங்கள்: எம்.உசேன் டெகரேஷன்: 'செஃப்' ரஜினி
நன்றி: அவள் விகடன்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator