Saturday 16 August 2014

கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி....... 17-08-2014

கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி....... 17-08-2014

(இப்பொழுது........

கிருஷ்ண ஜெயந்தின்னா சீடை முறுக்குதானா? பிஸ்ஸா , சமோசா,வெஜ் பர்கர் எல்லாம் கிடையாதா என்று கேட்கிரார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

பண்டிகை என்றவுடன் ஆவலோடு அந்த எதிர்பார்ப்பு, சந்தோஷம் எல்லாமே மிகவும் குறைந்து விட்டது)

கோகுலாஷ்டமி, ஸ்ரீஜயந்தி,கிருஷ்ண ஜயந்தி எல்லாமே பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் நாளை குறிக்கிறது.

கிருஷ்ணஜயந்தி என்ற உடன் நினைவுக்கு வருவது சீடை தான்.சின்ன சின்ன உருண்டையா கரகரன்னு.......

சிறுவயதில் பள்ளிக்கு போய்விட்டு திரும்பும் ஒரு நாளில் அம்மா பரண் மேலிருந்து பித்தளை டப்பா, பெரிய தூக்கு எல்லாம் எடுத்து தேய்த்து கவிழ்த்து வைத்திருப்பதை பார்த்தவுடன் கிருஷ்ண ஜயந்தி வருவது புரிந்துவிடும்.(மீதி பண்டிகைகளுக்கு இவ்வளவு பாத்திரங்கள் தேவை இல்லை.ஸ்ரீஜயந்திக்கு மாத்திரமே குறைந்தது 10/12 பெரிய தூக்கு, டப்பாக்கள் தேவை.)

இருந்தாலும் அம்மாவிடம், "கிருஷ்ண ஜயந்தி வருதாமா?நிறையா சீடை முறுக்கு எல்லாம் செய்வீயா?" என்று கேட்டு உறுதி படுத்திக்கொள்வோம். அம்மாவும், "ஆமாம்! சமத்தா எதையும் தொடாமல் இருந்தா நிறையா பண்ணிக்கொடுப்பேன்" என்றவுடன் சந்தோஷமாக இருக்கும்.

அதற்கு அடுத்து இரண்டு தினங்கள்,சாயந்திரம் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பொழுது வீடு முழுக்க எண்ணை வாசனையும்,இனிப்பு வாசனையுமாக இருக்கும்.

மறுபடியும் அம்மாவின், " சமத்தா எதையும் தொடாமல் இருந்தாக்க நாளைக்கு கிருஷ்ண ஜயந்தி, பெருமாளுக்கு பண்ணிவிட்டு உங்களுக்கு சாப்பிடரத்துக்கு கொடுப்பேன்" என்ற வார்த்தைகளுக்கு கட்டுபட்டு சமர்த்தாக இருப்போம்.எதையாவது தொட்டுவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று ஏற்கனவே பயமுறுத்தி வைத்திருந்ததால் பேசாமல் இருந்துவிடுவோம்.

கிருஷ்ணஜயந்தி அன்று பெரும்பாலும் பள்ளி விடுமுறையாக இருக்கும். காலையிலிருந்தே சாயங்காலம் பூஜைக்கு தயாராகிவிடுவோம்.அடிக்கடி அம்மாவிடம் சென்று , "எப்பம்மா பெருமாளுக்கு பண்ணணும்" என்று தொணத்தொணத்தபடியே இருப்போம்.அம்மாவும் நிதானமாக சாயந்திரம் அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் என்று பதில் சொன்னபடி வீட்டு வேலைகளில் முழுகியிருப்பார்.

மாலை 5 மணி ஆனவுடன் அம்மா வாசலில் பெருக்கி தண்ணீர் தெளித்து பெரியதாக கோலம் போட்டுவிட்டு,வீட்டினுள்ளும் சிறு சிறு கிருஷ்ணர் பாதம் வைப்பதை வேடிக்கை பார்த்தபடி அம்மா கூடவே நடந்துகொண்டிருப்போம். 

எங்க வீட்டில் புஜை அறை தனியாக கிடையாது. சமையல் அறையிலேயே ஒரு அலமாரியில் பெருமாள் படங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.அங்கேயே பூஜை செய்வோம்.
அந்த அலமாரியின் அடியிலேயே பெரியதாக கோலம் போட்டு குத்து விளக்கு ஏற்றி வைக்கப்படும்.பெரிய தட்டில்,வெற்றிலை பாக்கு,மல்லிகை, முல்லை,சாமந்தி ஆகிய பூக்களும்,வாழை, திராட்சை ,சாத்துக்குடி, கொய்யா,நாவல் பழம்,மாதுளை இன்னும் பிற பழங்கள், வெண்ணை, மற்றும் பண்டிகைக்காக செய்த பக்‌ஷணங்கள் எல்லாம் அம்மா எடுத்து வைப்பார்.

சுமார் 6/30 மணிக்கு மேல் தெரு முனையில் அப்பா வருவது தெரிந்தவுடன் ஓடிபோய் அவர் கையை பிடித்துக்கொண்டு, "அப்பா சீக்கிரமா பெருமளுக்கு பண்ணணும் வேகமா வா" என்றபடி அவரை அழைத்து வருவோம். அவரும் சிரித்தபடியே வந்து குளித்துவிட்டு பூஜையை ஆரம்பிப்பார். ஒரு 1/2 மணி நேரம் போல பூஜையெல்லாம் முடித்துவிட்டு முதலில் பெருமாள் தீர்த்தம் தருவார்.பிறகு வெண்ணை,சுக்கு வெல்லம்,ஆகியவற்றை பிரசாதமாக கொடுப்பார்.சுக்கு காரம் நாக்கை தாக்க ,அப்பாவிடம் இன்னும் கொஞ்சம் வெண்ணை கொடு என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்..

அதன் பின் அப்பா, "இனிமேல் நீங்க என்ன பக்‌ஷணம் வேண்டுமானால் சாப்பிடலாம் பெருமாளுக்கு பண்ணியாச்சு" என்பார். இரண்டு மூன்று தினங்களாக தொடக்கூடாது என்று சொல்லிவிட்டு இப்பொழுது சாப்பிடலாம் என்றவுடன் ஒரு திகைப்புதான் தோன்றும். அவரிடன், "நிஜமாவே சாப்பிடலாமாப்பா" என்று கேட்டு உறுதி செய்து கொண்டு முதலில் சீடை வைத்திருக்கும் தூக்கில் கையை நுழைப்போம். அதற்குள் அம்மா, " கண்டபடி கையெல்லாம் போடக்கூடாது பக்‌ஷணம் கெட்டுப்போயிடும் நீங்க கூடத்துல போய் உட்காருங்க நான் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லுவார்.

தூக்கில் நுழைத்த கையை வெறும் கையாக எடுக்காமல் கிடைத்த சீடையை அள்ளி (சின்ன கையில் ஒரு 3 அல்லது 4 சீடைகள் வரும்)அப்படியே வாயில் அடைத்துக்கொள்ளுவோம்.

அம்மா தட்டில் கொண்டு வருவதை பார்த்து "என்னம்மா நிறையா வைச்சிருந்தயே இவ்வளவுதானா?" என்று கேட்போம்.
அம்மா, "தட்டு நிறைய வெச்சுண்டு சாப்பிட்டா உடம்புக்கு வரும், கண்ணு வேற படும். கொஞசம் கொஞ்சமா எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ எல்லாம் உங்களுக்கு பண்ணதுதான்." என்றவுடன் சந்தோஷமாக சாப்பிட ஆரம்பிப்போம்.

அதற்கு அடுத்த நாளிலிருந்து ஒரு வாரம் வரையில் சாயங்கால டிபன் பக்‌ஷணங்கள்தான்.

அதன் பின் சற்று பெரியவர்களானவுடன் சீடை உருட்டும் வேலை செய்வோம்.உருட்டும் போதே சாப்பிடவேண்டும் என்கிற உணர்வை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வோம்(இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமே)

இன்னும் சற்று வயதான உடன் அம்மாவுடன் கூட மாட வேலை செய்தல் கோலம் போடுதல் எல்லாம் செய்வோம். பூஜை முடிந்ததும் பக்‌ஷணம் எடுத்துக்கோங்கோ என்று அம்மாவே கூப்பிட வேண்டும்.அப்படி கூப்பிட்டாலும், " நீ வைச்சுடும்மா நான் வேணுங்கறச்சே எடுத்துக்கறேன்" என்று பதில் சொல்லி இருக்கிறோம். இருந்தாலும் ஒரு நிமிடம் உள்ளே சென்று அந்த சீடையை மட்டும் சாப்பிட்டுவருவோம்.

சிறு குழந்தைகள் மாதிரி அவசரமாக சாப்பிடுவதை வயது தடுத்தாலும்,பண்டிகை என்ற சந்தோஷம் கட்டாயமாக மனதில் இருந்தது.

இப்பொழுது........

கிருஷ்ண ஜெயந்தின்னா சீடை முறுக்குதானா? பிஸ்ஸா , சமோசா,வெஜ் பர்கர் எல்லாம் கிடையாதா என்று கேட்கிரார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

பண்டிகை என்றவுடன் ஆவலோடு அந்த எதிர்பார்ப்பு, சந்தோஷம் எல்லாமே மிகவும் குறைந்து விட்டது.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator