ஸௌந்தர்ய லஹரீ...அழகு வெள்ளம்.....
இன்றுடன் 99வது 100வது ஸ்லோகங்களை எழுதி
முடிக்கிறேன். இதற்கு எனக்கு மன பலத்தையும்
சரீர பலத்தையும் அளித்த இறைவிக்கு முதற்கண்
வந்தனம் செய்கிறேன். இதற்கு பக்க பலமாக இருந்து
நான் எழுதியவற்றை மனதார பாராட்டி ஊக்குவித்தமைக்கு
என் சஹாக்களுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸௌந்தர்யலஹரீயினைப் பாராயணம் செய்ய இறைவியின்
அருள் வேண்டும். இதனை எழுத என்னை ஊக்கிவித்த சஹோதரி
சந்திரா சுப்ரமணியனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவியை வழிபடுபவன் கல்வி செல்வம்,அழகு, ஆயுள் எல்லாம்
நிரம்பப்பெறுவான். பேரின்பம்.
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேன வபுஷா|
சிரம் ஜீவன் நேவ க்ஷபித பசுபாச வ்யதிகர:
பரானந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜனவான்||
உன்னை வழிபடுபவன் ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் கூட ப்
பொறாமை படும்படி செல்வத்துடனும் கல்வியுடனும்
இன்பத்தை அடைகிறான்.மன்மதன் போன்ற அழகால்
ரதிதேவியின் பாதிவ்ரத்யத்தையும் கலங்கச்செய்கிறான்.
வினைக் கயிற்றின் கட்டுகள் நீங்கி இன்பரஸத்தை
சிரஞ்சீவியாக இருந்து அனுபவிக்கிறான். அம்பாளின்
பரிபூர்ண கடாக்ஷத்தால் ஒப்புயர்வற்ற கல்வி, செல்வம்
அழகு இவை மூன்றும் பக்தனுக்கு ஏற்படுவதை
சங்கரர் விவரிக்கிறார்.
தேவியளித்த சக்தியால் அவளைப் பாடியது சூரியனுக்கு
அவன் கிரணத்து அக்னியால் ஆராதனை செய்வதுபோலாகும்.
சகல ஸித்தி.
ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜன விதி:
ஸுதாஸூதேச் சந்த்ரோபல ஜலலவைர் அர்க்ய ரசனா|
ஸ்வகீயைர் அம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜனனி வாசாம் ஸ்துதி ரியம்||
வாக்கிற்கு பிறப்பிடமான தாயே! கர்ப்பூர தீபாராதனையால்
சூரியனுக்கு ஹாரத்தி செய்தாற்போலவும், குளிர்ந்த கிரணங்களைப்
பொழியும் சந்திரனுக்கு சந்திர காந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால்
அர்க்கியம் அளித்தாற்போலவும், சமுத்திரத்து ஜலத்தாலேயே
சமுத்திரத்திர்கு தர்ப்பணம் செய்தார்போலவும் உள்ளது உன்னுடைய
வாக்குகளால் அமைந்த இந்த ஸ்தோத்திரம்.
இந்த ஸ்லோகத்தைப் பற்றி நம் பெரியவா சொல்லியதாவது:
இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் முழு
ஸௌந்தர்யலஹரீயின் பலன் கிடைக்கிறது. எப்படி என்றால்
எல்லா வித்தைகளுக்கும் பிரயோஜனம் வினய ஸம்பத்து.
ஸகல வினயமும் இந்த ஸ்லோகத்தில் அடங்கியுள்ளது.பூஜை
செய்யும்போது ஈசுவரனுக்கு எல்லா உபசாரங்களையும்
செய்து பின் நீராஜனம் செய்ய வேண்டும். இதில் நீராஜனமும் உள்ளது.
ஆதி சங்கரர் எதற்குமேல் நினைக்க முடியாதோ அந்த தத்துவத்தை
தாழ்மையுடன் கூறியுள்ளார்.
இந்த பாஷ்யம் என் சிற்றறிவினால் எழுதப்பட்டது அல்ல.
ராமக்ருஷ்ணாமடம் ஸ்ரீஅண்ணா சுப்ரமணியம் அவர்கள்
எழுதிய பாஷ்யத்தின் அடிப்படையில் எழுதப் பெற்றதாகும்.
பல காலமாக அண்ணா அவர்களின் புத்தகங்கள் எல்லாம்
படித்து அதன் பலனாக க் கிடைத்த ஒரு அருமையான
சொத்து இது.
ஜய ஜய ஜய சக்தி ஒம் ஜய ஜய ஜய சக்தி
No comments:
Post a Comment