Thursday 3 July 2014

"கண்ணனும் நம் பெரியவாளும் நடத்திய திருவிளையாடல்கள்

"கண்ணனும் நம் பெரியவாளும்
நடத்திய திருவிளையாடல்கள்."
(இருவரும் ஒருவரே)
(வலையில் படித்தது)

மஹா கோபியான துர்வாசர் தன் சிஷ்யர்கள் சிலருடன் திருதராஷ்ட்ரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். திருதராஷ்ட்ரன் முறை படி அவரை வரவேற்றான். தன் மகன் துரியோதனை அழைத்து "அப்பா, இவரை நன்றாக கவனித்துக்கொள். இவர் ஆசீர்வாதம் செய்துவிட்டால் எப்பவுமே உனக்குத்தான் வெற்றி" என்றான்.

துரியோதனுக்கு இது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவரை உபசரித்தான். ஆனால் துர்வாசர் மகிழ்ந்ததாக தோன்றவில்லை.

தன் மாமா சகுனியிடம் இப்படி தெருவில் போகிறவர்களையும் காட்டுவாசிகளையும் உபசரிக்கும் நிலைக்கு வந்துவிட்டேனே என்று துரியோதன் புலம்பினான். சகுனி "டேய் கவலைப்படாதே! இதையே நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம். நான் சொல்கிறபடி செய். துர்வாசரை வழி அனுப்பும் போது நைச்சியமாக பேசி அவரை காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் அனுப்பிவிடு. அவருடைய ஆசீர்வாதங்கள் பலிக்குமோ என்னவோ, அவருடைய சாபம் ஒரு வழியாக்கிவிடும். இங்கேயே ராஜோபசாரங்களால் திருப்தி அடையாதவர் அங்கே காட்டில் பாண்டவர்கள் செய்யக்கூடிய சிறு உபசாரத்தால் எப்படி திருப்தி அடைவார்? சாபம் கொடுப்பார். நமக்கு நல்லது!" என்றான்.

துரியோதனன் அதே போல துர்வாசர் கிளம்பும் போது அவரை நமஸ்கரித்து, "ஸ்வாமி, எனக்கு கிடைத்த இதே பாக்கியம் என் சகோதரர்களுக்கும் கிடைக்க வேண்டும். காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் சென்று அவர்களது உபசாரத்தையும் தாங்கள் ஏற்க வேண்டும் " என்று வேண்டிக்கொண்டான். துர்வாசருக்கும் பாண்டவர்களை காண வேண்டும் என்று தோன்றியதால் அவரும் பாண்டவர்களைத் தேடிக்கிளம்பினார். காட்டில் அவர்களை ஒரு நடுப்பகல் தாண்டிய நேரத்தில் கண்டுபிடித்தார். பாண்டவர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர். பக்கத்தில் நதியில் நீராடி வருகிறோம். உணவு தயாராகட்டும் என்று சொல்லி அனைவரும் நீராடச்சென்றனர். பாண்டவர்கள் திகைத்தனர். சூரியன் கொடுத்த பாத்திரத்தில் இருந்து தினசரி உணவு எடுத்து இருக்கும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு கழுவி வைத்துவிட்டால் அடுத்த நாள்தான் உணவு கிடைக்கும்! 

ஆபத்து வந்தால்தானே நாம் கடவுளை நினைக்கிறோம்! த்ரௌபதி க்ருஷ்ணனை வேண்டினாள்! கண்ணா, இது என்ன சோதனை! எல்லாருக்கும் உணவிட்டுவிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே! இப்போது திடீரென்றூ உணவு தயாரிக்க என்ன செய்வேன்? எங்கே போவேன். முனிவர் வேறு மஹா கோபிஷ்ட்டராயிற்றே! நீதான் காப்பாற்ற வேண்டும்!
உடனே அங்கே க்ருஷ்ணன் வந்து சேர்ந்தான்.

இப்போதுதான் உன்னை நினைத்தேன். ஒரு விஷயம்!

உன் விஷயம் எல்லாம் அப்புறம் ஆகட்டும். இப்போது எனக்கு மஹா பசி. உணவிடு!

ஹா! கண்ணா நீயுமா என்னை சோதிப்பாய்?

என்ன சோதனை? அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பாடு போடு.

அதைத்தான் சொல்கிறேன். உணவு பாத்திரம் காலி.

பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன்.

பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே!

பரவாயில்லை அதை இங்கே கொண்டு வா!

பாத்திரத்தில் ஒரு மூலையில் ஒரே ஒரு பருக்கை சாதமும் கீரையும் ஒட்டிக்கொண்டு இருந்தது. த்ரௌபதி தலை குனிந்தாள்!

க்ருஷ்ணன் பருக்கையை எடுத்து உண்டான், தண்ணீர் குடித்தான். ஏதோ பெரிய விருந்து சாப்பிடது போல ஏப்பம் விட்டான். சரி சரி, நான் வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்!

நீராடி கடன் முடித்து கரையேறிய துர்வாசர் மற்றும் அவரது சிஷ்யர்களுக்கு திடீரென்று வயிறு நிரம்பிய உணர்வு! இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை! இப்போது பாண்டவர்கள் உணவிட்டால் அதை எப்படி சாப்பிடுவது? பேசாமல் அவர்கள் கிளம்பி வேறு திசையில் போய்விட்டனர்!

இதன் தொடர்ச்சியாக நம் பெரியவாளின் திருவிளையாடல் பார்ப்போம்.

மதனபள்ளியில் பெரியவா முகாம். அன்னக்கொடி கட்டிவிட்டார்கள். அதாவது யார் வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தி போகலாம். முகாம் இருக்கும் வரை இந்த அன்ன தானம் அங்கே நடக்கும்.

தகவல் அப்படியே சுத்து முத்து கிராமங்களுக்கும் பரவியது. ஒரு நாள் "வடை பாயசத்துடன் சாப்பாடு போடுகிறார்களாம், வா போகலாம்" என்று யார் ஆரம்பித்தார்களோ தெரியாது, போகும் வழி எல்லாம் ஆள் சேர்ந்துக் கொண்டு முகாமை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள்.

அன்ன தானம் எல்லாம் எப்போதோ முடிந்து எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்தாகிவிட்டது. பெரியவாளும் பிக்ஷை செய்தாயிற்று

திடீரென்று பெரியவா மடத்து மேனேஜரிடம் "டேய், ரொம்ப பசிக்கிறதுடா! என்ன இருக்கு?" என்று கேட்டார். மேனேஜருக்கு கை கால் ஓடவில்லை. இப்பதானே அரை மணி முன் சாப்பிட்டார்கள்? அதற்குள் எங்கிருந்து பசி வந்தது? அத்துடன் இப்படி பெரியவா கேட்டதே கிடையாதே! எவ்வளவு நாள் விரதமென்று உபவாசம் இருந்திருப்பார்!

"என்னடா பதிலே காணோம். ரொம்பவே பசிக்கறதே!" என்றார் பெரியவர்.

மேனேஜர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டார்.

"ஓஹோ, ஒண்ணுமே இல்லையா? ம்ம்ம் என்ன செய்யலாம்???"

அப்போது இரண்டு பேர் முகாமில் நுழைந்தார்கள். கையில் பழங்கள், ஏதோ பொட்டலங்களுடன். நமஸ்காரம் செய்து அவற்றை சமர்பித்தனர். பெரியவா அந்த தட்டில் இருந்து தேடி ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்தார். கற்கண்டு இருந்தது. ஒரே ஒரு துண்டை எடுத்து கீழே வைத்து கையால் தட்டி உடைத்தார். அது சுக்கு நூறானது. அதில் ஒரே ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். பக்கத்தில் இருந்த துளசி தீர்த்தத்தில் கொஞ்சம் குடித்தார். ஏப்பம் விட்டார்! வந்தவரை பார்த்து "அப்பாடா! சரியான நேரத்துக்கு வந்து என் பசியை தீர்த்தாய். க்ஷேமமா இரு! " என்று ஆசீர்வதித்தார். வந்தவருக்கு பரம சந்தோஷம்! வருவோர் கொண்டு வரும் பழங்கள் போன்ற எல்லாம் வழக்கமாக மடத்தில் உள்ளவர்கள் வயிற்றுக்கு போய் விடும்; அரிதாகத்தான் ஏதோ பெரியவா வயிற்றுக்குப்போகும் என்று தெரிந்திருந்ததால் ஒரு சின்னஞ்சிறு துண்டே ஆனாலும் தான் கொண்டு வந்த கற்கண்டை பெரியவா உண்டதில் அவருக்கு ஜன்ம சாபல்யம் ஏற்பட்டதாகவே தோன்றியது!

அதே சமயம் சாப்பிடப்போலாம் வா என்று கிளம்பிய கூட்டம் சுமார் 50-60 பேராக பெருகி அடுத்த தெருவை அடைந்திருந்தது. இதோ இந்த திருப்பம் தாண்டினால் முகாம் வந்துவிடும்! வயிறார சாப்பிடலாம்! ஒன்றும் அறியாத எளிய மக்கள்! ஏதோ ஒரு காலகட்டத்தில் அன்றைய அன்னதானம் முடிந்து விடும் என்ற கற்பனை கூட அவர்களுக்கு இல்லை!

திடீரென்று எல்லாருக்கும் வயிறு நிறைந்த உணர்வு! நடையின் வேகம் குறைந்து போய்விட்டது. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். "பசியே இல்லையே! வயிறு ரொம்பிப்போச்சே! இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கொள்ளலாமா?" கூட்டத்தில் எல்லோர் நிலைமையும் அதுதான். அப்படியே பிரிந்து அவரவர் வெவ்வேறு வழியில் போய்விட்டனர்!


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator